சென்னை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக திருட்டுச் சம்பவம் ஒன்று சென்னை ஊரப்பாக்கத்தில் நடந்துள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தில் ஊழியர்கள் பணத்தை நிரப்பிக்கொண்டிருந்தபோது, பணம் கொண்டு வரப்பட்ட வேனுக்கு காவலாக நின்றுகொண்டிருந்த காவலாளியே அந்த வேனில் இருந்த ரூ.38 லட்சத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பினார்.
சற்று நேரத்திற்கெல்லாம் காவலாளியைக் கைது செய்த காவலர்கள், அவரிடம் இருந்து பணத்தை மீட்டனர்.
சென்னை வேளச்சேரியில் ‘ஹிட்டாச்சி கேஸ் மேமேஸ்மென்ட்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்னையில் உள்ள பல்வேறு வங்கி ஏடிஎம் இயந்திரத்திலும் பணத்தை நிரப்பும் பணியைச் செய்து வருகிறது.
திங்கள்கிழமை காலை வழக்கம்போல், இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் முதலில் வேளச்சேரி, அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள 10 ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பிவிட்டு, கடைசியாக 5 பணப்பைகளுடன் ஊரப்பாக்கத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, காவலாளி ஞானசேகரன் வேனிலிருந்த ரூ.37.71 லட்சம் அடங்கிய பணப்பையைத் திருடிக்கொண்டு தலைமறைவானார். பின்னர், ஊழியர்கள் வந்து பார்த்தபோது, பணம் திருட்டு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கூடுவாஞ்சேரி காவலர்களின் விசாரணையில், இந்நிறுவனத்தில் பாதுகாப்புக் காவலாளியாக பணியாற்றி வரும் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ஞானசேகரன், 45, பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
உடனே காவலர்கள் அவரது வீட்டிற்குச் சென்று அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி, திருவான்மியூரில் ஒரு தனியார் விடுதியில் பதுங்கியிருந்த காவலாளி ஞானசேகரனைக் கைது செய்து, ரூ.38 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.