சென்னை: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தன்னைப் பற்றி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவதூறாகப் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணைக்காக பழனிசாமி எழும்பூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் முன்னிலையான நிலையில், ஜூன் மாதம் 27ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பழனிசாமி, “தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75% பணத்தை செலவு செய்யவே இல்லை,” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனை மறுத்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 95% மேல் செலவு செய்துள்ளதாகத் தெரிவித்தவர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.

