சென்னை: தமிழகத்தில் டெங்கிப் பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் டெங்கிப் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
இதையடுத்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்த விவரங்களை நாள்தோறும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக தொடர்ந்து டெங்கிப் பாதிப்பு குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். இன்புளுயன்சா, மஞ்சள் காமாலை உள்ளிட்ட உள்நோயாளிகள், பொதுவான அறிகுறிகள் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் தொடர்பான மருந்து மாத்திரைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிராம, நகர மற்றும் மாநகரத்தில் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்வதுடன், கொசுப்புழு உற்பத்தியாகாமல் பராமரிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வழிகாட்டி மேலும் தெரிவிக்கிறது.