சென்னை: உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் அவர் 3வது முறையாக போட்டியிடுகிறார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மும்பையில் புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: “இதற்கு முன்பும் நாம் பிரதமரின் தொகுதிகளைப் பார்த்திருக்கிறோம். வாரணாசி நகரம் முற்றிலும் மாறிவிட்டது என அப்பகுதி மக்கள் தற்போது பெருமிதத்துடன் கூற முடியும். பிரதமர் மோடி தனது தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளை உண்மையாக செய்திருக்கிறார். பிரதமரால் தனது தொகுதிக்கு என்ன செய்ய முடியும் என்பதை அவர் காட்டியுள்ளார்.
“இந்த முறை வாரணாசி தொகுதியில் அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார். வாரணாசி தொகுதியில் அவர் செய்ததுபோல் மற்ற எம்.பி.க்களும் தங்கள் தொகுதியில் செய்ய வேண்டும் என அவர் உறுதிபடத் தெரிவிக்கிறார்.
“பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ளது. இது பிரதமர் மோடியின் தேர்தல் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். ஓட்டு அவருக்குத்தான். மும்பை போன்ற பெருமையான நிதித் தலைநகரம், கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலிலும் பிரதமருக்கு உறுதுணையாக நின்றுள்ளது.
“அதனால் 2024ஆம் ஆண்டு தேர்தல் வேறுமாதிரியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. மும்பையில் பாஜக மற்றும் தே.ஜ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறுவதை மீண்டும் ஒருமுறை பார்க்கப் போகிறேன்,” என்று அண்ணாமலை கூறினார்.