செந்தில் பாலாஜி பிணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி பிணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

2 mins read
b8266131-28f8-4442-8f26-c32e5ba0e4e7
செந்தில் பாலாஜி தரப்பின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதில் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்னிலையாகி, ‘மற்றொரு வழக்கு சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வருவதால் விசாரணையை கோடை விடுமுறையின் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அந்த சமயத்தில் செந்தில் பாலாஜி சார்பில் பேசிய மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம், “மனுதாரர் 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இடைக்கால பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்,” என வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்து பேசிய நீதிபதிகள், “300 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் மனுதாரருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. 2½ ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளன,” என்று கூறி விசாரணையை வியாழக்கிழமை (மே 16) ஒத்திவைத்தனர்.

அதன்படி, செந்தில் பாலாஜி பிணை கோரிய மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் முன்னிலையாவதால் வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதிட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கை மறுநாள், அதாவது வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தரப்பின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்