சென்னை: கடந்த 13.5.2024ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தின்மும்பை நகரில் வைக்கப்பட்டிருந்த 120 அடி உயர விளம்பரப் பதாகை, பலத்த காற்று வீசியதால் அடியோடு சரிந்து 14 பேரின் உயிர்களைப் பறித்தது. அத்துடன் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
அந்த விபத்தையடுத்து மற்ற மாநிலங்களும் இதுபோன்று அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகள் அகற்றும் பணியை முடுக்கி விட்டுள்ளன.
அவ்வகையில் சென்னையில், அனுமதியின்றியும் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியும் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றும்படி சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2 நாட்களில் அனுமதியின்றியும், உரிய அளவீடுகளை தாண்டியும் வைக்கப்பட்ட 460 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகரில் உள்ள கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், சாலையோரம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அதிகக் கவனம் செலுத்துவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

