நாகப்பட்டினம்: நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை (19ஆம் தேதி) துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பயணத்திட்டம் தற்காலிமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கப்பல் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்த பயணிகள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது கப்பல் நிறுவனம்.
இதுதொடர்பாக கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவிர்க்கமுடியாத கடல் போக்குவரத்து விதிமுறைகள், காலநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக கப்பல் போக்குவரத்தைத் தொடங்க முடியவில்லை.
“கப்பல் இயக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களது பயணத் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமத்திற்கு மன்னிக்க வேண்டும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து சேவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதால், பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

