குலசேகரப்பட்டினம் பகுதியில் 2,233 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா

1 mins read
f7543ba3-e691-4861-94a2-67615db1daea
குலசேகரப்பட்டினத்தில் அமைந்த ராக்கெட் ஏவுதளம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தென் தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் பகுதியில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க முடிவாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்துக்கும் (இஸ்ரோ) தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கும் (டிட்கோ) இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இஸ்ரோவின் ‘இன்ஸ்பேஸ்’ நிறுவனத்துடன் இணைந்து குலசேகரப்பட்டினத்தில் 1,500 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ‘டிட்கோ’ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 59 பல்கலைக்கழகங்கள், 552 பொறியியல் கல்லூரிகள் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான திறன்பெற்ற மனிதவளம் உருவாக்கப்படுகிறது என்றும் தமிழகம் தொழில்நுட்ப கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலையில், விண்வெளி துறைக்கு தேவையான திறன் மிக்க மனிதவளம் தமிழகத்தில் கிடைக்கும் என்றும் டிட்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் உலகளாவிய விண்வெளி அரங்கில் தமிழகம் சிறப்பிடம் பெறும் என்றும் டிட்கோ தெரிவித்துள்ளது.

“திறன் வாய்ந்த மனித வளம், முதலீட்டுக்கு உகந்த தொழில் சூழல் ஆகியவற்றுடன், நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் தமிழகம் அமைந்துள்ளது. எனவே விண்வெளி தொழில் துறையினருக்கு உகந்த பகுதியாக தமிழகம் மாறியுள்ளது.

“மேலும், தமிழகத்தில் தற்போதுள்ள தொழில் கட்டமைப்பு மற்றும் அரசால் உருவாக்கப்பட்ட சூழல், புத்தாக்க தொழிலுக்கும் முதலீட்டுக்கும் வழிவகுத்துள்ளது,” என டிட்கோ தரப்பை மேற்கோள்காட்டி தினகரன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் உள்ள படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி, மாதவன்குறிச்சி ஆகிய கிராமங்களில் 2,233 ஏக்கர் பரப்பில், ரூ.950 கோடி செலவில் புதிய ஏவுதளம் பிரம்மாண்டமாக அமைகிறது.

குறிப்புச் சொற்கள்