கோவை: கர்நாடகாவில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்த 5 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு கோவை காவல்துறையினர் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பேசிக் கொண்டிருந்த 5 பேர் மீது சந்தேகம் எழுந்தது.
விசாரித்தபோது, ஐந்து பேரும் கர்நாடகாவில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து கோவையில் விற்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து தமிழக அரசு தடை செய்துள்ள மெத்தபடோமின் உட்பட 116 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து 24 முதல் 36 வயதுக்கு உட்பட்ட 5 இளையர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த உயர்ரக போதை மாத்திரைகளை 5 பேரும் கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்வது அம்பலமானது. இவ்வாறு வேறு கும்பல்கள் ஏதேனும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

