சென்னை: விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்துக்கும் சவுதி அரேபியாவுக்கும் தமிழகத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
முன்னதாக, சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பேங்காக் நகருக்கும் பின்னர் அங்கிருந்து சென்னைக்கும் இரண்டு விமானச் சேவைகளை புதிதாகத் தொடங்கியது ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனம்.
கடந்த 15ஆம் தேதி முதல் இப்புதிய சேவை தொடங்கப்பட்ட நிலையில், வாரத்தில் நான்கு நாள்களுக்கு இச்சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம், சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு இரு விமானச் சேவைகளை ஜூன் 1ஆம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவித்துள்ளது. வாரந்தோறும் செவ்வாய், சனிக்கிழமைகளில் இப்புதிய விமானங்கள் இயக்கப்படும்.
இதேபோல் புதிய உள்நாட்டு விமானச் சேவைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு விமானப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

