சென்னை: பள்ளி மாணவிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.
தென் சென்னையில் உள்ள ஒரு வீட்டில் பள்ளி மாணவிகளை வைத்து சட்டவிரோத பாலியல் தொழில் நடந்து வருவதாக காவல்துறைக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வீடு ரகசியமாகக் கண்காணிப்பட்டு வந்தது.
இந்நிலையில், 70 வயது முதியவர் ஒருவர் அந்த வீட்டுக்குள் சென்று வந்தார். அவரை மடக்கிப்பிடித்த தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டபோது சுமித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர்தான் தமக்கு பள்ளி மாணவிகளை அறிமுகப்படுத்தியதாக அந்த முதியவர் கூறினார்.
மேலும், அவ்வப்போது அந்த வீட்டுக்கு வந்த சிலர், சில ஆயிரங்களைக் கட்டணமாகச் செலுத்தி மகிழ்ச்சியை அனுபவித்ததாக முதியவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையை அதிர வைத்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பில் சுமித்ரா உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரது மகளை சென்னையில் உள்ள பள்ளியில் படிக்க வைத்துள்ளதாகவும் மகள் மூலமாக உடன் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
இதற்காக தனக்குத் தெரிந்தவர்கள், மகளுடன் படிப்பவர்கள், புதிய நண்பர்கள் என அனைவரிடமும் தனது மகளை இயல்பாகப் பேச வைத்துள்ளார்.
நடுத்தர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளைக் குறிவைத்து அப்பாவி பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்துள்ளார் சுமித்ரா. காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது சுமித்ராவின் பின்னணியில் மேலும் பலர் இருப்பது தெரியவந்துள்ளது.
அவரது சகோதரி ராணி, நண்பர் ராம், நேப்பாளத்தைச் சேர்ந்த இளம் பெண், கோவையைச் சேர்ந்த அசோக் குமார், மாணவிகளுடன் உல்லாசம் அனுபவித்த 70 வயது முதியவர் ரமணிதரன் ஆகியோர் கைதாகி உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளி மாணவிகள் தொடர்புடைய வழக்கு என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட இயலாது எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் 18 வயதுப் பெண், 17 வயது சிறுமி ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடங்குவர் என்றும் காவல்துறை மேலும் கூறியுள்ளது.

