மதுரை: மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க உள்ளனர். இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியதை அடுத்து 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
எனினும் மருத்துவமனையைக் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை. இதையடுத்து மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் தொடங்கின. எனினும் இதற்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறவில்லை எனும் தகவல் வெளியானது.
இதையடுத்து எய்ம்ஸ் நிர்வாகம் கடந்த 2ஆம் தேதி அன்று சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டு ஆய்வறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் அளித்தது.
இதையடுத்து தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இந்த அறிக்கையை ஆய்வு செய்ததாகவும் அதன் அடிப்படையில் உரிய அனுமதியை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவானது, எய்ம்ஸ் நிர்வாகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எய்ம்ஸ் திட்டத்துக்கு அனுமதி வழங்கலாம் எனப் பரிந்துரைத்தது.
இதையடுத்து கட்டுமானப் பணிகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

