திருப்பூர்: மேட்டூர் அணைக் கட்டுமானப் பணிகளின் போது அங்கு கூலி வேலைக்குச் சென்ற 126 வயது மூதாட்டி பழனியம்மாள் காலமானார்.
தனது 13 வது வயதில் மேட்டூர் அணை கட்டுமானப் பணிக்கு அவர் சென்றதாக குறிப்பிட்ட அவரது குடும்பத்தார், மூதாட்டியின் இறுதிச் சடங்குகளை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாளுக்கு 12 பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் பெயர் ராமன் ஆகும். இத்தம்பதியரின் பிள்ளைகளில் 85 வயது மகன் மட்டுமே உயிருடன் உள்ளார்.
பழனியம்மாளுக்கு பேரன் பேத்திகள், கொள்ளுப் பேத்திகள் என 152 பேர் உள்ளதாக குடும்பத்தார் கூறுகின்றனர். இந்நிலையில் முதுமை காரணமாக பழனியம்மாள் திங்கட்கிழமை காலமானார்.
மேட்டூர் அணை கட்டுமானப்பணிகளில் பழனியம்மாள் ஈடுபட்டதை வைத்தே அவரது வயதை குடும்பத்தார் கணக்கு செய்ததாகத் தெரிகிறது. இறுதிச் சடங்கின்போது தாரை தப்பட்டை முழங்க, அலங்காரத் தேரில் பழனியம்மாளின் உடலை வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
ஆங்காங்கே பழனியம்மாளின் தோற்றத்துடன் கூடிய பதாகைகளும் வைக்கப்பட்டு இருந்தன. காங்கேயம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

