கோயம்புத்தூர்: தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் ஏப்ரல் 6 ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் புறப்படவிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பணம் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மே 21 ஆம் தேதி கோயம்புத்தூர் கணபதி பகுதியில் எஸ்.ஆர்.சேகர் வீட்டிற்குச் சென்று சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் எஸ்.ஆர்.சேகர் பல கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்ததாக ஊடகச் செய்தி கூறுகிறது.
இதையடுத்து, எஸ்.ஆர்.சேகரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறை அழைப்பாணை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.