சேலம்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ஏராளமாக வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், அவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலத்தைச் சேர்ந்த சபீர், பாலாஜி மற்றும் கோகுலநாதன் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இருந்துள்ளன.
இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாகக் கூறி சபீர் வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை.
ஆத்திரமடைந்த கோகுலநாதன், சபீர் தமது வீட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், சபீரின் வீட்டிலிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான செல்லாத பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், சபீரை கைது செய்த காவல்துறையினர், பறிமுதல் செய்த ரூபாய் நோட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.


