சென்னை: மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளை உடனுக்குடன் பெற்றோருக்குத் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பிள்ளைகளின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள பெற்றோர் விவேக திறன்பேசி வைத்திருப்பது நல்லது எனவும் அத்துறை கூறியுள்ளது.
மாநிலம் முழுவதும் இதுவரை 8.30 லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோரின் திறன்பேசி எண்களை கல்வித்துறை உறுதி செய்துள்ளது என்றும் இம்மாத இறுதிக்குள் 1.25 கோடி திறன்பேசி எண்கள் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வாட்ஸ் அப்’ போன்ற செயலிகள் மூலம் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் விவேக திறன்பேசி வைத்திருப்பது அவசியமாகிறது என்றும் பெற்றோர் குறைந்த விலையில் கிடைக்கும் விவேக திறன்பேசிகளையாவது வாங்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.
இத்தகைய திட்டத்தை தனியார் பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றன. தற்போது அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் உட்பட அனைத்து முக்கியத் தகவல்களும் பெற்றோரின் திறன்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

