சென்னை: தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு விநியோகிக்க தமிழக அரசு திங்கட்கிழமை (மே 27) உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் 175 சிறப்புப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் 5,725 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
தமிழக அரசு நடத்தும் பள்ளிகளில் ஏற்கெனவே மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொண்டு நிறுவனங்களின் பள்ளிகளுக்கும் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் ஜூன் மாதம் முதல் சத்துணவு மையத்திலிருந்து உணவு விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதிய உணவு உரிய நேரத்தில் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான தட்டுகள், குவளைகள் உள்ளிட்ட உபகரணங்களை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

