சட்டவிரோத தாய்ப்பால் விற்பனை: கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

சட்டவிரோத தாய்ப்பால் விற்பனை: கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

1 mins read
9fa8422e-16a8-42ca-9153-e96579a5a112
பறிமுதல் செய்யப்பட்ட தாய்ப்பால். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தாய்ப்பால் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், சென்னை மாதவரத்தில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் போத்தல்களில் தாய்ப்பாலை அடைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவது உறுதியானது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மருந்து விற்பனைக் கடையை மூடி முத்திரை வைத்தனர்.

செம்பியன் முத்தையா என்பவர் தனது மருந்து விற்பனைக் கடையில், 50 மில்லி தாய்ப்பால் போத்தல்களை 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது குறித்த தகவல் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, குளிர்சாதனப் பெட்டியில் 200க்கும் மேற்பட்ட தாய்ப்பால் போத்தல்கள் இருந்தன.

அவற்றைப் பறிமுதல் செய்து சோதனைக்காக அரசு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மருந்துக் கடை உரிமையாளர் முத்தையாவை கைது செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தாய்ப்பால் யாரிடமிருந்து, எப்படி பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

குறிப்புச் சொற்கள்