சென்னை: தமிழகத்தில் உள்ள இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் இணைய வசதி செய்து தரப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் கல்வித்துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் 20,332 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.519.73 கோடி செலவில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 அதிநவீன (ஸ்மார்ட்) வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுமைப்பெண், நான் முதல்வன் ஆகிய திட்டங்களால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது இலக்கு நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம் என்று குறிப்பிட்டுள்ள அவர், பயணத்தைத் தொடர்வோம், தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்று தெரிவித்துள்ளார்.