தூத்துக்குடி: ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 4,50,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஜூன் 2ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதல் மரக்கன்றை விவசாயிக்கு வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிகத் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.
தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இவ்வாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார். அவர் முதல் மரக்கன்றை கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனனுக்கு வழங்கி இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 417,000 மரங்களும், தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈஷா 2002ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த இயக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

