தென்காசி: கடும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் குற்றால அருவியில் மாற்றுத்திறனாளி நபர் பத்திரமாக குளிக்க உதவிய காவல்துறையினருக்கு பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோடை விடுமுறையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமான குற்றாலத்தில் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விடவும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளி நபரை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் பத்திரமாக அழைத்து சென்று பாதுகாப்பான முறையில் அவர் அருவியில் குளிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து அவரைப் பத்திரமாக அனுப்பினர்.
கடும் கூட்ட நெரிசலிலும் மாற்றுத்திறனாளி நபர் பத்திரமாகக் குளிக்க உதவி அவருக்கு உறுதுணையாக இருந்த தென்காசி மாவட்ட காவல் துறையினரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

