சென்னை: இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜூன் 4ஆம் தேதி, இந்திய நேரப்படி காலை 10.30 மணி (சிங்கப்பூர் நேரம் பிற்பகல் 1 மணி) அளவில், வாக்கு எண்ணிக்கையின் சில சுற்றுகளின் முடிவில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் இருப்பதாக ஊடகத் தகவல்கள் கூறின.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருச்சி, ஈரோடு, நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாம் இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
தங்கள் கட்சி நன்கு வளர்ந்திருப்பதை இது காட்டுவதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பெருமிதம் தெரிவித்தனர்.