சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 7ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இத்தகவலை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெற்ற வேளையில் அரசியல் கட்சிகளிடம் இருந்து தலைமைத் தேர்தல் அலுவலகத்துக்கு எந்தவித புகாரும் வரவில்லை என்றார்.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடந்து முடிந்தது என்றும் தேர்தல் முடிவுகளை தலைமை தேர்தல் ஆணையர் நாட்டின் அதிபரிடம் வழங்குவார் என்றும் சத்யபிரதா சாகு கூறினார். அதன் பின்னர் மத்தியில் புதிய ஆட்சி அமைக்க நடவடிக்கை தொடங்கும் என்றார் அவர்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும் அரசியல் கட்சிகளிடம் இருந்து எந்தவித புகார்களும் பெறப்படவில்லை என்றார் சத்யபிரதா சாகு.
இதற்கிடையே மக்களவைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது தமிழக காவல் துறையினர் கவனமாக இருந்ததாகவும் இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தமிழக காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டல், காவல்துறையினரின் களப்பணி, தீவிர கண்காணிப்பு காரணமாக தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணி அமைதியாக நடைபெற்றதாக காவல்துறை தலைவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.