திருச்சி: துபாயில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம், திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று, துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்தடைந்த பயணிகள் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது, பயணி ஒருவரின் பயணப்பையின் உட்பகுதியில், தேவையின்றி சில கம்பிகள் இருப்பது சந்தேகத்தை எழுப்பியது.
அவற்றைத் தனியாக ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை தங்கத்தால் உருவாக்கப்பட்டது தெரிய வந்தது. அவற்றின் சந்தை மதிப்பு ரூ.43 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தக் கம்பிகள் 75 பவுன் தங்கத்தால் உருவாக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்த அதிகாரிகள், அவற்றைக் கடத்தி வந்த ஆடவரைக் கைது செய்துள்ளனர்.

