அண்ணாமலை-தமிழிசை மோதல்: விளக்கம் கேட்கிறது பாஜக தலைமை

அண்ணாமலை-தமிழிசை மோதல்: விளக்கம் கேட்கிறது பாஜக தலைமை

2 mins read
63d3dfa6-f108-429e-a41a-354a374df49a
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று தமிழிசை கூறி இருந்தார்.  - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு அண்ணாமலையின் செயல்பாடுகளே காரணம் என்று நிர்வாகிகள் புகார் கூறி வந்தனர்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பல இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று தமிழிசை கூறி இருந்தார்.

கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவில் பதவி அளித்ததையும் தமிழிசை விமர்சித்திருந்தார்.

அண்ணாமலையின் செயல்பாடுகள் மற்றும் மற்ற நிர்வாகிகளுடன் அவர் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்தும் கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளது.

தான் சொல்வதை கட்சி நிர்வாகிகள் பலர் கேட்பதில்லை என்றும் கட்சியின் முழுக்கட்டுப்பாட்டையும் தனக்கு அளித்தால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறலாம் என்றும் மேலிடத்தில் அண்ணாமலை கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் நீடிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 19 மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 114 சட்டசபை தொகுதிகளிலும் முதலிடம் பிடிக்க முடியவில்லை.

அது தவிர, பாஜகவின் தற்போதைய 4 எம்எல்ஏ தொகுதிகளிலும் பாஜக வாக்குகள் சரிந்தன. சொந்தத் தொகுதியிலேயே பாஜகவினர் கடும் பின்னடைவைச் சந்தித்தது, பாஜகவினர் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பைக் காட்டுவதாக விமர்சனம் எழுந்தது. இது பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலுக்கு முன்னரே அறிக்கை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்