மதுரை: யூடியூப் மூலம் பிரபலம் அடைந்த சவுக்கு சங்கரின் பிணை மனுவை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சவுக்கு சங்கர் கைதானபோது அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து 400 கிராம் கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவானது.
சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கஞ்சா வழக்கில் தமக்கு பிணை வழங்குமாறு கோரி சங்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களில் சங்கரின் மூன்று வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.1.25 கோடிக்கு பணப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கிப் பணப் பரிமாற்றம் தொடர்பாக சங்கரிடம் மீண்டும் விரிவான விசாரணை நடத்தப்பட இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் கூறின.
கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் தனக்கு பிணை வழங்கக்கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே இதே வழக்கில் பிணை கோரப்பட்ட நிலையில், அந்த மனுவை சவுக்கு சங்கர் தரப்பு திடீரென திரும்பப் பெற்றது. நிலையில், தற்போது இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

