மதுரை: மதுரை பரோட்டா தயாரிப்பதற்கான பயிற்சியை மேற்கொண்ட குற்றவாளி ஒருவர், காவல்துறையினரிடம் சிக்கினார்.
கோவையைச் சேர்ந்தவர் சிவகுமார். 45 வயதான இவர், சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார். மேலும், கேரளாவிலும் சென்னையிலும் இவர் மீது தலா ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளை அறிந்தவர் என்பதால், சிறை அதிகாரிகளிடம் இவருக்கு நல்ல மரியாதை கிடைத்து வந்தது.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சிறை விடுப்பில் வெளிவந்த சிவகுமார், திடீரென மாயமானார்.
இதையடுத்து, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். கோவையில் வசித்து வரும் அவரது மனைவியை விசாரித்தபோது, கணவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக அவர் கூறினார்.
மேலும், பெற்ற மகளின் திருமணத்துக்குக்கூட சிவகுமார் வரவில்லை என்பது உறுதியானது.
தலைமறைவு காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் பணியாற்றி வந்துள்ளார் சிவகுமார். பல மொழிகளில் பேசத் தெரிந்தவர் என்பதால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த சிவகுமாருக்கு, உணவக நிர்வாகத்திடம் நல்ல பெயர் கிடைத்தது.
இந்நிலையில், அவர் பணியாற்றிய உணவகத்துக்கு மாறுவேடத்துக்கு வந்த காவல் அதிகாரி ஒருவர் உணவகங்கள் செயல்படும் முறையைத் தெரிந்துகொள்ள விரும்புவதாகக் கூற, அவரை சிவகுமாரிடம் அறிமுகப்படுத்தி உள்ளார் உணவக உரிமையாளர்.
தொடர்புடைய செய்திகள்
இதன் மூலம் சிவகுமாரிடம் நெருங்கிப் பழகிய காவல் அதிகாரி, மதுரை பரோட்டா செய்முறை குறித்து விவரங்கள் கேட்டுள்ளார். மதுரை பரோட்டா செய்வதற்குப் பயிற்சி பெற்றபடியே, உரிய நேரத்தில் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, அவர் சுற்றி வளைக்கப்பட்டுக் கைதானார்.
அவர் தன் மனைவியிடம் தனி கைப்பேசி இணைப்பின் மூலமும் தொடர்ந்து பேசி வந்ததும் அவ்வப்போது குடும்பத்துக்கு பணம் அனுப்பி வந்ததும் தெரிய வந்துள்ளது.

