திருப்பூர்: திருப்பூரில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அப்பெண்ணுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 50 வயதான புஷ்பலதா, கடந்த 21ஆம் தேதி பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, புஷ்பலதாவின் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டன. அவர் 50 வயதைக் கடந்துவிட்டதால் அவரது இதயம் தானமாகப் பெறப்படவில்லை.
இந்நிலையில், புஷ்பலதாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.