சென்னை: மீனவர்களின் நலன்களை காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
கடந்த 19, 24, 25 ஆம் தேதிகளில் தமிழக முதல்வர் எழுதியுள்ள மூன்று கடிதங்களுக்கு தற்போது மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதில் எழுதியுள்ளார்.
அண்மைய விவரங்களின்படி 34 இந்திய மீனவர்கள் இலங்கையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் 6 பேர் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் இதை உறுதியாக நம்பலாம் எனவும் தமது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

