சிவகாசி: தென் மாவட்டங்களில் கந்து வட்டியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் பலர் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த மே 23ஆம் தேதி சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த வெங்கம் என்பவர் தனது மனைவி, மகள், இரண்டு பேரக்குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கந்துவட்டி தொடர்புள்ள ஆறு பேரிடம் லிங்கம் கடன் வாங்கி இருந்ததாகவும் அதை திருப்பிச் செலுத்த இயலாததால் கந்து வட்டிக் காரர்களால் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவகாசியைச் சேர்ந்த 51 வயதான ஜெயச்சந்திரனும் அவரது மனைவியும் தொழிலுக்காக சிலரிடம் நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இத்தம்பதியருக்கு 23 வயது மகன், 24 வயது மகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கு கடன் கொடுத்த மூன்று பேர் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததை அடுத்து நால்வரும் உயிரை மாய்த்துக்கொண்டதாக ஏசியாநெட் தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இதேபோல் மேலும் சில சம்பவங்களைக் குறிப்பிட்டு கந்து வட்டி கொடுமை குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

