தர்மபுரி: வயிற்றில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து விவரம் தெரிவித்த கும்பலை தர்மபுரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நடமாடும் மருத்துவக் கருவியின் உதவியுடன், கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என்பதைக் கண்டறிந்து விவரம் தெரிவிக்க, இந்தக் கும்பல் ரூ.13,000 வசூலித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மர்ம கும்பல் ஒன்று தங்களை மருத்துவக்குழு என அறிமுகப்படுத்திக் கொண்டு பலரை ஏமாற்றி வந்துள்ளது.
கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினத்தை முன்கூட்டியே தெரிவிப்பது தமிழகத்தில் சட்ட விரோதமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் நடமாடும் மருத்துவக் கருவி மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து விவரம் தெரிவித்துள்ளார். இதற்காக, அவர் ரூ.13,000 பெற்றுள்ளார்.
இவரைப் போலவே வேறு சில பகுதிகளிலும் இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் பணம் பெற்றுக்கொண்டு சிசுவின் பாலினம் குறித்த தகவலை தெரிவித்து வந்தனர்.
பொதுமக்கள் அளித்த தகவல்களின் பேரில், இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இதே குற்றத்தின் பேரில் சிலர் சிக்கினர்.


