சென்னை: தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. முதல்நாள் சட்டசபைக் கூட்டத்தொடரில் இரங்கல் தீர்மானத்துடன் அவை முடிந்தது.
அதன்பின்னர் கூட்டத் தொடரில் தொழில் மற்றும் முதலீட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, “வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் பெரும் முதலீடுகளை ஈர்த்து வருவதன் தொடர்ச்சியாக மேலும் இத்துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்து அதிகளவிலான முதலீடுகளைப் பெறும் நோக்கில் தமிழ்நாடு விண்வெளித் தொழில் கொள்கை வெளியிடப்படும். மேலும், தமிழ்நாட்டை விண்வெளித் தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்தவும், அதிகளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் விண்வெளித் தொழில் கொள்கை வெளியிடப்படும்,” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு விண்வெளித் தொழில் கொள்கை வெளியிடப்படும் என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்த நிலையில் அதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விண்வெளித் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம். புதிய மற்றும் விரிவாக்க தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டம். மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்கள் விண்வெளித் தொழில் விரிவாக்க மாவட்டங்களாக அறிவிப்பு. அனைத்துத் தரப்பினரும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

