சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், அவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், நான்காவது முறையாக இவ்வாறு கடிதம் எழுதி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதில் தமிழக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பதை பட்டியலிட்டுள்ளார்.
அண்மைக் காலத்தில் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக முதல்வர் கவலை தெரிவித்துள்ளார்.

