சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.167 கோடி மதிப்புள்ள, 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அனைத்துலகக் கும்பலின் தொடர்பு இருப்பதால், புலன் விசாரணைத் துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் பரிசுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை வழியாக இந்தத் தங்கம் கடத்தப்பட்டிருப்பதை அறிந்ததால். மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். பரிசுப் பொருள்கள் விற்கும் கடையில் தங்கக் கடத்தல் நடந்திருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது முதல் அங்குள்ள மேலும் இரு கடைகள் மூடப்பட்டுள்ளன. அக்கடைகளிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர்.
சென்னை விமான நிலையத்தின் அனைத்துலக முனைய புறப்பாடு பகுதியில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி டிரான்சிட் பயணிகள் மூலமாக 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சுமார் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தங்கக் கடத்தலில் ஈடுபட்ட கடையின் உரிமையாளர் சபீர் அலி, கடை ஊழியர்கள் ஏழு பேர், ஒரு டிரான்சிட் பயணி ஆகிய ஒன்பது பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
சில தினங்களுக்கு முன், இலங்கையைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்ததால் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், 60 நாள்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த முகம்மது சபீர் அலி, 30, சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில், ‘ஏர்ஹப்’ பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
விமான நிலையத்தில் கடைகள் நடத்த இந்திய விமான ஆணையத்திடம் உரிமம் பெற்றுள்ள வித்வேதா பிஆர்ஜி நிறுவனத்திடம் ரூ.77 லட்சம் கொடுத்து சபீர் அலி அந்தக் கடையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கடையில் ஏழு பேர் பணிபுரிகின்றனர். விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அடையாள அட்டை வைத்துள்ள அவர்கள், அதைப் பயன்படுத்தி விமான நிலையத்தின் எந்த பகுதிக்கும் செல்ல முடியும்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாடுகளில் இருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வரும் டிரான்சிட் பயணிகள், சென்னை விமான நிலைய கழிப்பறைக்கு செல்வர். அவர்களை பின்தொடர்ந்து சபீர் அலி கடை ஊழியர்களும் செல்வர். கழிப்பறையில் தங்கக் கட்டிகள் கைமாற்றப்படும். சபீர் அலி கடை ஊழியர்கள், அதை ஆடையில் மறைத்து வெளியே எடுத்து வருவர்.
அவர்களிடம், விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அடையாள அட்டை இருப்பதால், சுங்கத்துறை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். பின்னர், கடத்தல் கும்பலிடம், தங்கக் கட்டிகளை ஒப்படைத்து விடுவர் என்று கூறப்படுகிறது.
கடை நடத்த, வித்வேதா பி.ஆர்.ஜி., நிறுவனத்திடம் சபீர் அலி கொடுத்த தொகையும் கள்ளப் பணம் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கடத்தல் விவகாரத்தில் வித்வேதா பிஆர்ஜி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அவர்களின் வீடுகளில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.

