கரூர்: பெரியாண்டாங்கோவில் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அவரது சகோதரர் சேகர் வீடு, அவர்களது நெசவு தறிக்கூடம், பெட்ரோல் நிலையம், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்னாள் நேர்முக உதவியாளர் கார்த்தி வீடு உள்ளிட்ட 12 இடங்களில் மத்திய புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகள் 2 பேர், ஆய்வாளர்கள் 9 பேர் கொண்ட குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7ஆம் தேதி அன்று) காலை 7 மணிக்குச் சோதனையைத் தொடங்கினர்.
அதிகாரிகள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சென்னையில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடிப் புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை மேற் கொண்டனர்.
முன்னதாக, ஜூலை 5ஆம் தேதி விஜயபாஸ்கரின் பெட்ரோல் நிலையத்தில் பணிபுரியும் மணல்மேடு தாளப்பட்டியில் உள்ள யுவராஜ், தோட்டக்குறிச்சி செல்வராஜ், கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலக்கரூரைச் சேர்ந்த சார்-பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலிச் சான்றிதழ் கொடுத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக பிரவீன், யுவராஜ், சித்தார்த், ரகு, செல்வராஜ், மாரப்பன், ஷோபனா, செல்வராஜ் ஆகியோர் மீது கடந்த ஜூன் 9ஆம் தேதி காவல்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தான் எப்போதும் கைதுசெய்யப் படலாம் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜூன் 12ஆம் தேதி கரூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்பிணை கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
அதேபோல் அவரது சகோதரர் சேகரும் முன்பிணை கேட்டு மனுச் செய்திருந்தார். அந்த இரண்டு மனுக்களையும் கடந்த மாதம் 25ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
எனவே, அவர் சிகிச்சையின் போது நான் உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன்பிணை கேட்டு ஜூலை 1ல் மனு தாக்கல் செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த மனுவை சனிக்கிழமை (6.7.2024) விசாரித்த நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது.

