தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன

2 mins read
1988b49c-6f39-40c6-8df4-993e355b4add
வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள். - படம்: தமிழக ஊடகம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை (ஜூலை 10) நடைபெறும் இடைத் தேர்தலையொட்டி, விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவின் நா. புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கலும், 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும் நடைபெற்றது. ஜூன் 26ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இத்தொகுதியில் திமுகவின் அன்னியூர் அ. சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

பிரசாரம் நிறைவு

கடந்த 15 நாள்களுக்கும் மேலாக இத்தொகுதியில் நடைபெற்று வந்த பிரசாரம் திங்கட்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக 276 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் மொத்தமாக 2,37, 031 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

276 வாக்குப்பதிவு மையங்களில் 42 பதற்றமானவையாகவும், 3 மிகவும் பதற்றமானவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களையும் கண்காணிக்க இணையக் கண்காணிப்புக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறை தேர்தல் நடத்தும் அலுவலர் மு.சந்திரசேகர் தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு மையம் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு மையத்தில் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் உள்ளிட்டவை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

276 வாக்குப்பதிவு மையங்கள் 23 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்த மண்டலத்துக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு மையங்களில் காவல்துறைப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்