சென்னை: தமிழகத்தில் 4,500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
இதனால் பிற ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் பாடங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதையடுத்து, காலியாக உள்ள தலைமை ஆசிரியர்களுக்கான இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை என்றால், அந்தப் பணி அதே பள்ளியில் உள்ள பிற பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது என்றும் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள ஆசிரியர்களுக்கு தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் வகுப்புகளை நடத்த முடியாத சிக்கல் நிலவுகிறது என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது 37,000 அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றுள் 2,994 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 4500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதுதான் திமுக அரசின் சாதனையா என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

