சென்னை: தமிழகத்தில் ரவுடிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
‘ரவுடிகளுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலடி தரப்படும்’ என்று சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள அருண் எச்சரித்துள்ளார்.
அண்மையில் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்டிராங் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சென்னையில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகரித்துள்ளது.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் ரவுடிகளை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருணுக்கும் காவல் தலைமையிட டிஜிபியாக உள்ள டேவிட்சன் ஆசிர்வாதத்துக்கும் தமிழகக் காவல் துறைத் தலைவர் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சென்னையில் உள்ள ரவுடிகளின் பட்டியல் மீண்டும் சரி பார்க்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ரவுடிகளின் எண்ணிக்கை 6,000 பேர் என்றும் இவர்களில் 758 பேர் சிறையில் உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இவர்களைத் தவிர மற்ற ரவுடிகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதே போல் மாநிலம் முழுவதும் உள்ள 21,000 ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.