சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை 5 நாள் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் அவரது வீடு அருகே கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் சரணடைந்தனர். இவர்கள் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் காவல்துறை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அனுமதிக்குமாறு காவல்துறை முறையிட்டனர். அதன்படி நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பில் காணொளி வாயிலாக வியாழக்கிழமை (ஜூலை 11) எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திட்டத்தை வகுத்துக்கொடுத்தது யார் என்பது தொடர்பாக தீவிரமாக விசாரிக்க கைதான 11 பேரையும் ஐந்து நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.