புதுக்கோட்டை: புதுக்கோட்டையை அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடி துரை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் நிகழ்ந்தது. ரவுடி துரை மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள துரை, நான்கு கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் திருட்டு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அவரை அங்குள்ள நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் தப்பிச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், அவர் திருவரங்குளம் காட்டுப்பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடி வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையில் நான்கு காவல்துறையினர் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
அப்போது, காவல்துறையினர் தம்மைக் கைது செய்ய வருவதை அறிந்த துரைசாமி, அவர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றார். இதைக் கவனித்த காவல்துறையினர் ரவுடி துரையை சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில், கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இளவரசன் என்ற மற்ற ரவுடியைக் கொலை செய்ததாக துரைசாமி மீது ஒரு வழக்கு பதிவாகி உள்ளது.

