விழுப்புரம்: வன்னியர் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி, ஒட்டுமொத்த தமிழகமும் நிலைகுத்திப் போகும் வகையில் தீவிரப் போராட்டம் நடத்த பாமக தயங்காது என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வன்னியர் சங்கத்தின் 45வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழு நாள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதைவிட, தீவிரமாக ஒரு போராட்டம் நடத்தினால்தான் நடப்பு திமுக அரசு பணியும் அல்லது இடஒதுக்கீட்டைக் கொடுக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த 1980ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டு முதல், இந்நாள் வரை இட ஒதுக்கீடு தொடர்பாக மேற்கொண்டு வந்த பல்வேறு போராட்டங்கள் குறித்து விவரித்தார்.
கடந்த 44 ஆண்டுகளாக 90 ஆயிரம் கிராமங்களுக்கு தாம் நேரடியாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதன் எதிரொலியாக, கடந்த அதிமுக அரசு 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கியதாக ராமதாஸ் குறிப்பிட்டார்.
“யாரால், எதனால் இட ஒதுக்கீடு தொடர்பாக நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை இளையர்களுக்கு புரியவைத்துள்ளோம். இதனால் அவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
“எனவே, இனி நடத்தப்போகும் போராட்டம் முந்தையப் போராட்டதைவிட கடுமையாக இருக்கும்,” என்றார் ராமதாஸ்.

