சென்னையில் 14 நாள்களில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது

2 mins read
6ed1d316-7da0-42da-93c6-4a5c712869a6
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.அருணின் உத்தரவின் பேரில் 11 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். - கோப்புப் படம்

சென்னை: சென்னை மாநகரில் கடந்த 14 நாள்களில் 11 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையாளர் அலவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

“சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 21.07.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 411 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 130 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 173 குற்றவாளிகள், குட்கா புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 29 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 7 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 16 குற்றவாளிகள், பெண்களை மானபங்கப்படுத்திய 5 குற்றவாளிகள் மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் 4 குற்றவாளிகள் என மொத்தம் 780 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டுக் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது,” என்று அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்