சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்துச் சென்றதாகக் கூறி அப்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணையை ஜூலை 25க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் எடுத்துச் சென்றதாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏ-க்கள் மீது அதிமுக ஆட்சிக்காலத்தில் உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உரிமைக்குழுவால் அனுப்பப்பட்ட விளக்கம் கோரும் கடிதத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கோரும் கடிதத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டசபைச் செயலாளர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. ஆனால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 22 தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, உரிமைக்குழு தங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வழங்கவில்லை என்று திமுகவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரில் 4 பேருக்கு மட்டுமே விளக்கம் கோரும் கடிதம் வழங்கியதாகக் கூறியுள்ளனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உள்பட அப்போதைய எம்.எல்.ஏ-க்கள் யாருக்கும் விளக்கம் கோரும் கடிதம் வழங்கப்படவில்லை என்று கூறியதால், அவர்களுக்கு இன்றே விளக்கம் கோரும் கடிதம் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 25க்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.