அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே திங்கட்கிழமை அதிகாலையில் சாலையோரம் மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியாகினர்.
ஈரோடு மாவட்டம் சூளை ஜி.கே.ஆர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(42). இவர் தனது மனைவி மோகனா (40 ), மாமியார் இந்திராணி( 67) மற்றும் மகள் வருணா(10 ), மகன் சுதர்சன் ( 15), ஆகியோருடன் ஜூலை 20ஆம் தேதி ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றுள்ளனர். பின்னர் அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு திங்கட்கிழமை அதிகாலை ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
காரை கிருஷ்ணகுமார் ஓட்டி வந்தார். கார் கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை என்ற இடத்தில் அதிகாலை 3.30மணியளவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் கிருஷ்ண குமாரும் அவரது மகள் வருணா, அவரது மாமியார் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் கிருஷ்ண குமாரின் மனைவி மோகனா, மகன் சுதர்சன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி காவல்துறையினர், சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மோகனா, சுதர்சன் ஆகியோரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது நடந்த இந்த கோர விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.