திருப்பூர்: பின்னலாடை நகரான திருப்பூரில் இருந்து வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு டி-சட்டை உள்ளிட்ட ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேலும், அனைத்துலக அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பணிப்பின் (order) பேரில் பனியன்கள் தயார்செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட், உலகக் காற்பந்து போட்டி உள்பட அனைத்துலக அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு திருப்பூரிலிருந்து பனியன்கள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஜூலை 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில், அப்போட்டியில் பங்கேற்கும் பார்வையாளர்கள் அணிவதற்காக திருப்பூரில் உள்ள பேக் பே இந்திய நிறுவனம் 10 லட்சம் டி-சட்டைகளைத் தயாரித்து அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான தீபா ஜெயன் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா பேசியபோது, “பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக எங்களது நிறுவனம் மூலம் பெற்ற பணிப்புகளில் இதுவரை 70 விழுக்காட்டை முடித்து அனுப்பி வைத்துவிட்டோம். மீதமுள்ள 30 விழுக்காடு பனிப்புகளை முடிப்பதற்கு 6 சிறு, குறு நிறுவனங்கள் மூலம் பனியன் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
“ஏற்கெனவே, 2023ம் ஆண்டு பிரான்சில் நடந்த ரக்பி உலகக் கிண்ணப் போட்டிக்கும் பனியன்கள் தயாரித்து அனுப்பி வைத்திருந்தோம். அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தின் அதிகாரபூர்வ உரிம திட்டத்தின் மூலம் எங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு தயாரித்து அனுப்புகிறோம். ஜவுளி உற்பத்தியில் பல நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுவதில்லை. பல ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய நம்பகத்தன்மையின் மூலம் நாங்கள் சுமுகமாக இயங்கி வருகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

