சென்னை: சென்னை அனைத்துலக விமான நிலையத்தில், தனித்தனியாக தங்கம் கடத்திய இருவரை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து 4.2 கோடி ரூபாய் மதிப்புள்ள (648,000 சிங்கப்பூர் வெள்ளி) 6.4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
ஒரு சம்பவத்தில் காபி தயாரிக்கும் இயந்திரத்தில் ரூ.2.61 மதிப்புள்ள (421,000 சிங்கப்பூர் வெள்ளி) கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
குற்றம் சாட்டப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த 30 வயது விக்னேஸ்வரன் ராஜா சந்தேகத்திற்கிடமான நடத்தையின் அடிப்படையில் வியாழக்கிழமை ‘கிரீன் சேனலில்’ (தீர்வை செலுத்தத் தேவையில்லாத பொருள்கள் வைத்திருப்போருக்கான வரிசை) தடுத்து வைக்கப்பட்டார்.
அவரது பொருள்களை ஆய்வு செய்தபோது அதிகாரிகள் எஸ்பிரஸோ காபி தயாரிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்தனர். அதைப் பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் மீட்டனர்.
விசாரணைக்கு பிறகு ராஜா நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
துபாயில் வேலை பார்த்த ராஜா அண்மையில் வேலையை இழந்துள்ளார். தங்கத்தைக் கடத்தி வந்து விமான நிலையத்திற்கு வெளியே காத்திருப்பவரிடம் வழங்க அவருக்கு ரூ.40,000 கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவத்தில், ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்தில் ரூ.1.6 கோடி மதிப்புள்ள (259,000 சிங்கப்பூர் வெள்ளி) 2.4 கிலோ தங்கம் வைத்திருந்த 36 வயது ஷேக் மெகபூபை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
குவைத்தில் இருந்து வந்திறங்கிய ஆந்திர மாநிலம் கடப்பாவை ஷேக் மெகபூப் தனது இடைவாரில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
சுங்கவரி செலுத்த வேண்டிய பொருள்களைக் கொண்டுவராத நிலையில், அவர் வெளியே செல்ல முற்பட்ட போது, சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது இடைவாரில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், குவைத் விமான நிலையம் அருகே பெயர் தெரியாத ஒருவர் அவரிடம் தங்கத்தைக் கடத்தக் கூறியதாகவும் சென்னையில் அது கைமாற்றப்பட்டதும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார். அவரிடம் விசாரணை தொடர்கிறது.