தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் அலங்கியம் அருகே காந்திநகரில் உள்ள ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் அலங்கியம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 28) என்பவர் பணம் எடுக்க சென்றிருந்தார். எதிர்பாராத விதமாக பணம் வராததால் ஏ.டி.எம். அட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு பணத்தை எடுக்காமல் சென்று விட்டார். அதன் பின்னர் அங்கு பணம் எடுக்கச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவர்களான முகிலன், கவுஷிக் இருவரும் பணம் எடுத்த போது கூடுதலாக ரூ.10 ஆயிரம் வந்திருந்தது. இதனால் அவர்கள் எடுக்க வேண்டிய பணத்தை வைத்துக்கொண்டு மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை அலங்கியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் சேகரும் காவல்துறையினரும் ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து ஹரிபிரசாத்தை வரவழைத்து மாணவர்கள் முன்னிலையில் அந்த 10 ஆயிரம் ரூபாயை அதன் உரிமையாளரான ஹரிபிரசாத்திடம் ஒப்படைத்தனர்.
மேலும் கூடுதல் பணத்தை ஒப்படைத்த அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களைக் காவல்துறையினரும் பொதுமக்களும் பாராட்டினர்.

