சென்னை: தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 9 பில்லியன் டாலா் மதிப்பிலான மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந் நிலையில், அதை 12 பில்லியன் டாலராக உயா்த்த தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் ‘‘இன்வெஸ்டோபியா’ எனும் பெயரில் பன்னாட்டு முதலீட்டாளா்கள் மாநாடு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்தியாவை இயக்கும் வலுவான இயந்திரமாக தமிழ் நாடு உள்ளது. தொழில்நுட்பப் பொருள்கள் உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. நாட்டின் மின்னணுப் பொருள்களின் மொத்த உற்பத்தியில் 30 விழுக்காடு தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகம் - யுஏஇ: தமிழகத்துக்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் (யுஏஇ) இடையே ஏறக்குறைய 1,800 ஆண்டுகளுக்கு மேலாக வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு நாடுகளுடன் இணைந்து தொழில் தொடங்குவதன் மூலம் தமிழகம் இன்னும் பெரிய உயரங்களை எட்டும் என நம்புவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில், யுஏஇ-யின் பொருளாதாரத் துறை அமைச்சா் அப்துல்லா பின் டூக் அல் மா்ரி, சிஐஐ-யின் பன்னாட்டு மன்றத் தலைவா் தினேஷ், தெற்கு மண்டலத் தலைவா் ஆா்.நந்தினி மற்றும் முதலீட்டாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.