சென்னை: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்துவந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த மலையப்பன் (வயது 49) என்பவர் ஜூலை 24ஆம் தேதி மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவை - திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே வந்து கொண்டிருந்த போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக தான் ஒட்டிவந்த பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பத்திரமாக நிறுத்திய பின்னர் தன்னுயிர் நீத்தார்.
இந்நிலையில், தனது உயிரைக் கொடுத்து பள்ளி குழந்தைகளைக் காப்பாற்றிய வேன் டிரைவர் மலையப்பனின் குடும்பத்தினரை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவரது பெற்றோர் மற்றும் மகன்களிடம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்றி தன்னுயிர் நீத்த டிரைவர் மலையப்பனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் சார்பில் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

