சென்னை: வருவமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபல தனியார் தொழில் குழுமத்தின் ரூ.298 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அந்த நிறுவனத்தின் கீழ் சிமென்ட், சொத்து விற்பனை, இறக்குமதி, ஏற்றுமதி, மின் உற்பத்தி என இந்தியா முழுவதும் பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அக்குழுமத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்குச் சொந்தமான சென்னை உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனையில் கட்டுக்கட்டாய் ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி நகைகள், சொத்துகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
முந்தைய சோதனைகளின் தொடர்ச்சியாக, அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அந்நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை நடத்தியது. அதில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அக்குழுமத்தின் ரூ.360 கோடி வங்கி வைப்புத் தொகையை அமலாக்கத்துறை முடக்கியது.
மேலும், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கையாளுவதில் ரூ.900 கோடி ஊழல் நடந்திருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், அக்குழுமத்துக்கு சொந்தமான ரூ.298 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

